Tuesday 4 August 2015

முன்னே வச்ச காலை முன்னும் பின்னும் வைக்கலாமா?

ஒரு செயலில் இறங்கி விட்டால் “இறுதி வரைக்கும் வந்து பார்’ என்ற சவாலுடன் செயலில் இறங்கி விடவேண்டும்.

ஒரு கதை கேளுங்க!

மன்னன் ஒருவன் தன் படையினருடன், தனக்கு தொந்தரவு தந்து கொண்டிருந்த எதிரி நாட்டுக்கு கப்பல்களில் புறப்பட்டான்.

எதிரிநாடு பெரிய தீவு. படைபலமும் மிக அதிகம். மன்னனுடன் சென்ற வீரர்களுக்கு தங்கள் வெற்றி குதிரைக்கொம்பே என்ற எண்ணம் ஏற்பட்டது.

எப்படியாவது, இதை மன்னனிடம் எடுத்துச் சொல்லி நாடு திரும்பி ஏற்பாடு செய்யுங்கள் என படைத்தலைவரிடம் வேண்டினர்.

படைத்தலைவருக்கும் உண்மை நிலை புரிந்தது.

எதிரிநாட்டை நெருங்கும் முன் கப்பலின் மேல்தளத்தில் நின்ற மன்னனிடம் படைத்தலைவர் இதை எடுத்துச் சொன்னார்.

மன்னன், அவரது முகத்தை ஏற இறங்கப் பார்த்து விட்டு, மீண்டும் கடலை நோக்கினான்.

ஏதும் பேசவில்லை.

மன்னனுக்கு தனது யோசனையில் சம்மதமில்லை என்பதைப் புரிந்து கொண்ட படைத்தலைவர் அமைதியாக திரும்பி விட்டார்.

படைகள் எதிரிநாட்டை அடைந்தன. மன்னன் படைகளிடம்,

“”நாம் வந்த கப்பல்களின் அடியில் துவாரமிட்டு அத்தனையையும் மூழ்கடியுங்கள்,” என்று உத்தரவு போட்டான்.

“”இவனுக்கென்ன பைத்தியம் பிடித்து விட்டதா?”
என்று யோசித்த படையினர்,

வேறு வழியின்றி அவன் சொன்னதைச் செய்தனர்.

பின் அவர்களிடம், “”எக்காரணம் கொண்டும் எடுத்த செயலை முடிக்காமல் விடக்கூடாது.

ஜெயித்தால் எதிரிகளின் கப்பல்களில் நம் நாட்டுக்கு திரும்புவோம்.

தோற்றால் ஒட்டுமொத்தமாக இங்கேயே மடிவோம்,” என வீர முழக்கமிட்டான்.

மன்னனின் வீரத்தைக் கண்டு வியந்த படையினர் உத்வேகம் பெற்றனர்.

கடுமையாகப் போரிட்டு எதிரிகளின் பெரும்படையை வென்றனர்.

எதிரிகளின் கப்பல்களில் நாடு திரும்பி மக்களின் பாராட்டைப் பெற்றனர்.

முன் வைத்த காலை முன்னும் பின்னும் வைப்பது சரியில்லை என்பதைப் புரிந்து கொண்டீர்கள் அல்லவா!

~*~

No comments:

Post a Comment