Sunday 30 August 2015

மனம்

மாலைநேரம்.. அந்த மன்னன் தன் மந்திரியுடன் மாறுவேடத்தில் நகர்வலம் வந்துகொண்டிருந்தான். நகருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த அந்த இடத்தில் இருந்த குடிசையொன்றின் வாசலில் சோகமே உருவாக ஒரு மனிதன் அமர்ந்துகொண்டிருந்தான். 

அவனை எப்போதுமே, முன்பின் பார்த்திராத மன்னனுக்கு அவனைக் கண்டதும், திடீரென்று எரிச்சலும் ஆத்திரமும் வந்தது. மன்னனுக்கே அது அதிசயமாக இருந்தது. அவசரமாக நகர்வலத்தை முடித்துக்கொண்ட மன்னன், அரண்மனைக்கு திரும்பும்போது மந்திரியைக் கேட்டான். "அங்கு அமர்ந்திருப்பவன் யார் மந்திரி? அவனை இதுவரை நான் கண்டதேயில்லை, ஆனால் அவனைப் பார்த்ததுமே அவன் மீது தீரா வெறுப்பு வந்தது. கொன்றுவிடலாமா என்று கூட யோசித்தேன்.. ஏன் எனக்கு இப்படி ஓர் எண்ணம் வரவேண்டும்?"

மன்னனின் கேள்விக்கு மந்திரியால் பதில்சொல்ல முடியவில்லை."எனக்கு சிலநாள் அவகாசம் கொடுங்கள் மன்னா,இதற்கான சரியான காரணத்தை அறிந்துசொல்கிறேன்." என்றார் மந்திரி.

அடுத்த நாள், "அரண்மனையின் சுவர்களெல்லாம் சிதைந்துவிட்டன, விரைவில் சீரமைக்கவேண்டும், சீரமைப்பில் சந்தன மரங்களைப் பயன்படுத்தினால்வாசனையாகவும் இருக்கும்" என்று மன்னனிடம் ஆலோசனை கேட்ட மந்திரி, மன்னன் ஒத்துக்கொண்டதும், அரண்மனை, அந்தப்புரம் எல்லாவற்றையும் சந்தன மரங்களால் அலங்கரித்தார்.

நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தன. அன்றைய மாறுவேட நகர்வலம், அன்றைக்குஅதே பழைய இடத்தை அடைந்தது. அதே மனிதன் குடிசையின் முன் அமர்ந்திருந்தான். மன்னனுக்கோ ஆச்சரியம்.

"மந்திரி, ஞாபகமிருக்கிறதா? சிலநாட்களுக்கு முன், எனக்கு இவனைப் பார்த்தாலே அருவருப்பாக இருக்கிறது என்று கூறினேன், நீங்களும் கொஞ்ச நாட்களுக்குப் பின் காரணம் சொல்வதாகச் சொன்னீர்கள். ஆனால்,இதென்ன அதிசயம்... இன்று இவனைப் பார்த்ததும் எரிச்சலே ஏற்படவில்லையே? பதிலாக அவனிடம் சென்று அன்பாக உரையாடவேண்டும், அவனை ஆரத்தழுவி நண்பனாக்கிக் கொள்ள வேண்டும் என்றல்லவா என் மனம் சொல்கிறது? இஃதென்ன விந்தை?"

மந்திரி புன்னகைத்தார்.
"அதுதான் எண்ணத்தின் வலிமை மன்னவா, இவன் ஒரு சந்தனமர வியாபாரி. அண்மைக்காலமாக, சந்தன மரம் வாங்குமளவு நம்நகரில் வணிக வசதி அவ்வளவாக இல்லாததால் இவனுக்கு வியாபாரத்தில் பெருநட்டம் ஏற்பட்டது. வாழ்க்கையே வெறுத்துப் போயிருந்த இவன், நாட்டின் மன்னனான தாங்கள் இறந்தால், தங்களை எரிக்க சிதை அமைக்கவாவது சந்தன மரங்கள் பயன்படும் என்று தங்கள் மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.அந்த அவன் எண்ணமே சில நாட்களுக்கு முன் இவனைக் கண்டபோது தங்களிடம் பெருவெறுப்பாக வெளிப்பட்டது.

இதையெல்லாம் விசாரித்து அறிந்துகொண்ட நான், அரண்மனைச் சீரமைப்புக்காக பெருந்தொகையான சந்தனமரங்களை கொள்வனவு செய்தேன். இப்போது பெருத்த இலாபம் கிடைத்ததால், அந்த இலாபத்திற்குக் காரணமான மன்னர் நீடூழி வாழவேண்டும் என்று மனதார வாழ்த்திக் கொண்டிருக்கிறான். அந்த நல்லமனமே உங்களை அவனுடன் பழகவும் அவனுடன் அன்புபாராட்டவும் தூண்டுகிறது.

வாழ்க்கையே கொடுக்கல் வாங்கல் தான்... மற்றவர்கள் மீது நாம் அன்பு செலுத்தினால் அதன் பிரதிபலனாக இன்னும் அன்பை நிச்சயம் பெறுவோம். மற்றோரை வெறுத்தால், நாமும் வெறுத்தொதுக்கப்படுவோம். இன்னொருவர்க்கு தீங்கு நினைக்கும்போது, அதுவே எதிர்மறை எண்ணமாய் மாறி அவரையும் எம்மை வெறுக்கவைக்குமே தவிர, அங்கே ஆக்கபூர்வமாக எதுவும் நடவாது. நல்ல எண்ணங்களைக் கொண்டிருந்தாலே போதும்... எப்போதும் நம்மைச் சுற்றி நல்லதே நடக்கும்!" என்று விளக்கினார் மந்திரி. புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக தலையை அசைத்தான் மன்னன்.

~*~

Saturday 29 August 2015

சுவை...

ஒரு நாட்டு மன்னன்
தன் அரன்மனையில்
நாட்டியம் ஆடவந்த
பெண்ணின் அழகில்
மயங்கி
அவளை
அடைய
ஆசைப்பட்டான்.
"அப்பெண்னோ
மன்னா
நாங்கள்
நடனம்
ஆடுவது
எங்கள்
குல
தொழில்
வேண்டாம் ......
"மன்னா
நாங்கள்
ஆண்டவனுக்கு
தொண்டு
செய்பவர்கள்
என்றாள் ........
"மன்னவனோ
ஆண்டவனும்
அரசனும்
ஒன்று
தான் ......
"நீ
என்
இச்சைக்கு
இணங்கதான்
வேண்டும் ......
"வா
நான்
இந்த
நாட்டிற்க்கே
உன்னை
அரசியாக்குகிறேன
என்றான் ......
"அப்பெண்
எவ்வளவே
வாதாடியும்
விடவில்லை
மன்னனிடம்
கடைசியில்
ஒப்புக் கொண்டாள் ....
"அப்பெண்
சரி
மன்னா
நாளை
தாங்கள்
என்
வீட்டிற்க்கு
வாங்கள்
விருந்து
வைக்கிறேன் .......
"அமுதுண்டு
பிறகு
சல்லாபிக்களாம்
என்றாள் ......
"மன்னனும்
சென்றான் ....
"அப்பெண்
மன்னனுக்கு
16 வகை
கலரில்
இனிப்பு
வழங்கினாள் .....
"மன்னன்
எனக்கு
சாப்பிட
பொறுமை
இல்லை ......
" நீயே
ஊட்டி விடு
என்று
கூறினான் .....
"அப்பெண்ணும்
ஊட்டி
விட்டாள் .....
"மன்னன்
சுவைத்தான்
விருத்து
முடிந்தது .....
"மன்னனிடம்
கேட்டாள்
மன்னா
16
வகையான
இனிப்பு
சுவைத்தீர்களே
ஒவ்ஒன்றின்
சுவை
எப்படி
இருந்தது
மன்னா .......
"மன்னன்
நிறம்
மட்டுமே
வேறு வேறு
சுவை
ஒன்று
தான்
என்றான் ....
"பெண்
மன்னா
நாங்களும்
அப்படிதான்
பெண்கள்
நிறம்
மட்டுமே
வேறு வேறு
சுவை
ஒன்று
தானே
என்றாள் .....
"மன்னன்
அப்பெண்ணின்
காலில்
விழுந்து
வணங்கினார் ..
"தாயே
என்
அறிவுக்கண்
திரந்தவளே
என்றான் ......
"இது
கதை
அல்ல
உண்மை"
"நம் வீட்டிலும் பெண்கள் உண்டு ....
"பிற பெண்களிடம் பழகும் போது நம்
வீட்டு பெண்ளாக நினைத்து சகோதரிகளிடம்
பழகுவதாக பழகுங்கள் ..
"நட்பு வளரும் பிற பெண்கள் மனதை
காயப்படுத்தாதீர்கள் ....

~*~

Tuesday 25 August 2015

கடவுள் கணக்கு ...!

வருஷம் பூரா, படாத பாடு பட்டும் பலன் கிடைக்காமல், திடீர் மழையாலும், திடீர் புயலாலும், திடீர் வறட்சியாலும் பயிர்கள் பாதிக்கப்படுவதால், மனம் நொந்துப் போன ஒரு விவசாயி, கடவுள்கிட்டே கேட்டான்...
"ஏ ஆண்டவனே! உனக்குக் கொஞ்சமாச்சும் மூளை இருக்கா? மழையை அளவாப் பெய்ய வைச்சா என்ன? ஏன் இப்பிடி காட்டாற்று வெள்ளமா பெருக வச்சு பயிர்களையெல்லாம் அழிக்குறே?
அதே மாதிரி காத்து இதமா அடிச்சாப் பத்தாதா? புயலாய்த் தான் அடிக்கணுமா? வெயில் அடிச்சாப் பரவாயில்லே! ஒரேயடியா இப்பிடி வறட்சி வர வைக்கணுமா?
உனக்கு பஞ்ச பூதங்களை எப்படி மேனேஜ் பண்றதுன்னு கொஞ்சம் கூடத் தெரியலை! எங்கிட்டே அந்த சக்தியைக் கொடு. உற்பத்தியைப் பெருக்கி நாட்டில் சுபிட்சத்தை உண்டாக்கிக் காட்டுறேன்”ன்னு சவால் விட்டான்.
கடவுளும், "சரி உன் இஷ்டம். இனி இயற்கை உன் சொல்ப்படி நடக்கும்"ன்னு அவனுக்கு அந்தச் சக்தியைக் கொடுத்தார்.
அன்றிலிருந்து அந்த விவசாயி இட்ட கட்டளைக்கு நிலம், நீர், ஆகாயம், வெப்பம், காற்று எல்லாம் கட்டுப் பட்டுச்சு.
மழை அளவா பெய்ஞ்ச்சு. காற்று மிதமா வீசிச்சு. நிலம் நல்ல விளைச்சலைக் கொடுத்துச்சு. வெப்பம் அளவோடு இருந்துச்சு. பயிர்கள் அமோகமா விளைஞ்சிருப்பதைப் பாத்து அவனுக்குப் பெருமிதம் தாங்கல.
கடவுளைக் கூப்பிட்டு, "பாத்தீங்களா ஆண்டவனே? நான் எப்படி விளைச்சலைப் பெருக்கி இருக்கேன்ன்னு" சொன்னான்.
கடவுளும், "சரி.. அறுவடை செய்" என்று அருகில் நின்று வேடிக்கை பார்த்தார்.
விவசாயி அறுவடை செய்து முற்றிய கதிர்களை உதிர்த்துப் பார்த்தான். நெல் சிதறியது. ஆனால் உள்ளே அரிசி இல்லை. எல்லாமே பதராக இருந்தன. அவன் திகைத்துப் போய் இறைவனை ஏறிட்டுப் பார்த்தான்.
கடவுள் அமைதியாகச் சொன்னார். "இதான் உனக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். நான் புயலைக் கொடுக்கும் போது பயிர் தன் வேரை பலப்படுத்திக்கும். நான் வறட்சியைக் கொடுக்கும் போது தன் வேர்களை நன்றாக பாய விட்டு நீரைத் தேடி வளரும். நான் நீரை அதிகமாகக் கொடுக்கும் போது அதில் வேர்கள் அழுகிப் போகாமல் தன் வேர்க்கால்களை வலுவாக்கிக் கொள்ளும். அதனால் அதன் வளர்ச்சி, எல்லா பருவ நிலைகளுக்கேற்றபடி மாறி நல்லதொரு பலன் கொடுக்கும். பயிராய் அது வளரும்.
ஆனால் நீ வளர்த்த பயிர்கள், சகல வசதியும் சுகமாய் கிடைத்ததும், சோம்பேறியாய் வளர்ந்து பலன் கொடுக்காமல் பதராய் மாறிவிட்டது.
இது விவசாயிக்கு மட்டுமில்லை. நம் குடும்பத்துக்கும் பொருந்தும். பிள்ளைகளுக்குக் குடும்பக் கஷ்டம் தெரியாமல் சுகமாக வளர்த்தால், அவர்களால் குடும்பத்துக்கும் சமுதாயத்துக்கும் எந்தவிதப் பலனும் இருக்காது. ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்து வளர்ந்த பிள்ளைகளே எதிர்காலத்தில் ஏற்றமிகு பலனைத் தருவார்கள்!" என்றார் ஆண்டவன்.

~*~

ஐந்தாண்டு இராஜா...!

ஒரு ஊரில் , ஒரு ராஜா !
ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.
அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.
இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர்'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.
இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக் காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவர் சிறப்பாக மக்கள் போற்றும் படி ஆட்சி செய்ததால் அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது. அவனை காட்டிற்கு அனுப்ப யாருக்கும் விருப்பமில்லா விட்டாலும், சட்டத்துக்கு கட்டுப்பட்டு சோகத்துடன் காத்திருந்தனர்.
மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான்; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''
தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்! நான் மறு கரைக்கு செல்லும் வரை நான்தான் அரசன் தெரியுமல்லவா....? என உத்தரவிட்டான்...!!!''
கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப் பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.
மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.
மிகவும் அதிர்ச்சியடைந்தது படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறு கரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றது இல்லை. அழுது புலம்பி,புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.
படகோட்டி பொறுத்துக் கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''
''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''
''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''
''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''
''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''
''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக் காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!
இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள், காய்கனிகள், மற்றும் வாழ தேவையான அனைத்தும் தயார் செய்தோம்.
மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!
நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.
இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.
இந்தக் கதையில்
ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?
பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.
ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.
இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!
அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல;
நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும், திட்டமிட்ட பின் வெற்றி பெறும் வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே....!!!

~*~

கடன் ...!

வீடு வீடாகப் பொருட்களை வினியோகிக்கும் அந்தச் சிறுவனுக்கு ரொம்பப் பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் அவனிடம் பணமே இல்லை.

அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிடக் கேட்கலாம் என நினைத்தான். கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். அவனுக்கோ சாப்பாடு கேட்க ரொம்பக் கூச்சம்.

‘கொ… கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?’ தயக்கத்துடன் கேட்டான்.

அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியைக் கவனித்தாள்.

உள்ளே போய் ஒரு கப் பால் கொண்டு வந்து கொடுத்தாள்.
பாலைக் குடித்துப் பசியாற்றிய சிறுவன் கேட்டான், `நான் எவ்வளவு கடன்பட்டிருக்கேன்?’

`கடனா? அப்படியொன்றுமில்லை. அன்பான செயலுக்கு விலை இல்லை என அம்மா சொல்லியிருக்கிறார்…’, அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள்.

‘ரொம்ப ரொம்ப நன்றி…’ சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்.

ஆண்டுகள் கழிந்தன. அந்த சிறுவன் நகரிலேயே பெரிய டாக்டர் ஆனான். அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது. அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனை வந்தது.

மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்தப் பெண்ணின் ஊரைப் படித்ததும் அவருக்குள் சின்ன மின்னல். விரைவாக அறைக்குப் போய் அந்தப் பெண்ணைப் பார்த்தார். அவளேதான். தனது பசியாற்றிய நல்ல உள்ளம் படைத்தவள்.

அன்று முதல் தனது அத்தனை உழைப்பையும் செலுத்தி அவளுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்குப் பின் அவள் குணமானாள். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்தப் பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது. இதை எப்படிக் கட்டப் போகிறேனோ எனும் பதற்றத்துடன் அதைப் பிரித்த அவள் திகைத்துப் போனாள்.

அந்த பில்லின் கடைசியில் எழுதப்பட்டிருந்தது, `ஒரு கப் பாலில் உங்கள் கடன் எல்லாம் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்.’ அவளுடைய கண்கள் கசிந்தன.
மனிதனுக்கு இருக்க வேண்டிய மகத்தான குணாதிசயங்களில் ஒன்று நன்றி....

~*~

Monday 24 August 2015

கோணம் ...!

ஓர் அற்புதமான சிற்பி, ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார்.
ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், 'ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?' என்று கேட்டார்.
'தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர்.
பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி, அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான கடவுள் சிலை ஒன்றை உருவாக்கினார்.
அந்தச் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது. போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டார். அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர்.
முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார்.அந்த சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், 'இந்த அற்புதமான சிலைக்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்?'… என்று கேட்டார்.
அதற்கு சிற்பி, 'வேறு எங்கிருந்தும் இல்லை. தங்கள் கடை வாசலில் தான் இதைக் கண்டெடுத்தேன். என்னை நினைவில்லையா தங்களுக்கு? ஆறு மாதங்களுக்கு முன் இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் நீங்கள் கொடுத்த கல் தான் இது என்றார்.
கடைக்காரர் வியந்தார்.
ஆம். தங்கள் பார்வையில் இது தடைக் கல்லாய்த் தெரிந்தது. என் பார்வையில் கடவுளை பொதிந்து வைத்திருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது. வேண்டாத பகுதியையெல்லாம் செதுக்கி எடுத்தேன். உள்ளே இருந்த கடவுளின் உருவம் வெளிப்பட்டது!' என்றார்.

தேவையற்ற என்ணங்களை வாழ்வில் நீக்கினால் நாமும் விலைமதிப்பற்ற மனிதனாய், ஒவொருவரும் நம்மை போற்றும் வகையில் வாழ்ந்து காண்பிக்கலாம்

~*~

2 ஆப்பிள்

ஒரு அழகிய குட்டி பெண் தன் இரு கைகளிலும் இரண்டு ஆப்பிள்கள் வைத்திருந்தாள் .

அவளது அம்மா உள்ளே வந்து ஒரு புன்னகையுடன் குட்டிப் பெண்னை கேட்டார்: "என் செல்லம் , நீங்கள் உங்கள் அம்மாவுக்கு இரண்டு ஆப்பிள்களில் ஒன்றை கொடுக்க முடியுமா ?"

சில விநாடிகள் தனது அம்மாவை பார்த்துவிட்டு
திடீரென்று குட்டி பெண் ஒரு கையில் உள்ள ஆப்பிளை ஒரு விரைவான கடி கடித்து, மற்றும் ,அடுத்த கையில் உள்ள ஆப்பிளையும் ஒரு கடி கடித்து விட்டாள் .....

அவளின் முகத்தில் இருந்த புன்னகை மாறுவதை .அம்மாவால் உணரவே முடிந்தது ......ஆனாலும் ஏமாற்றத்தை காட்டவில்லை .

அப்பொழுது, சிறு பெண் தனது அம்மாவிடம் கடித்த ஆப்பிள் ஒன்றை நீட்டி சொன்னாள் " இந்தாங்க ...இது தான் மிகவும் சுவையா இருக்கு " ......

நீங்கள் யாராக இருந்தாலும் ,
எவ்வளவு அனுபவ சாலியாக இருந்தாலும் ,
எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும்,
முடிவுகளை சற்றே தள்ளி ........

மற்றவர்கள் தங்கள் கருத்தை விவரிக்க வாய்ப்பு கொடுங்கள் ..
நீங்கள் பார்ப்பது என்றுமே உண்மையாகாது ....

~*~

நேர்மை விதை ...!

ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். எல்லாரும் தன் அறைக்கு வருமாறு கட்டளை இட்டார். உங்களில் ஒருவர் தான் என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும், அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்க போகிறேன். யார் வெற்றியடைகிறார்களோ அவர் தான் அடுத்த மேலாளர் என்றார்.
என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன். இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்த வருடம் என்னிடம் காட்ட வேண்டும். யார் செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ அவரே என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.
அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கி சென்றனர். அந்த கம்பெனியில் வேலை செய்யும் ரபீக்கும் ஒரு விதை வாங்கி சென்றான். தன் மனைவியிடம் முதலாளி சொன்ன அனைத்தையும் சொன்னான். அவன் மனைவி தொட்டியும் உரம் தண்ணீர் எல்லாம் அவனுக்கு கொடுத்து அந்த விதையை நடுவதற்க்கு உதவி செய்தாள்.
ஒரு வாரம் கழிந்தது நிறுவனதில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் ரபீக்கின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.
ஒரு மாதம் ஆனது செடி வளரவில்லை, நாட்கள் உருண்டோடின ஆறு மாதங்கள் ஆனது அப்பொழுதும் அவன் தொட்டியில் செடி வளரவே இல்லை. நான் விதையை வீணாக்கிவிட்டேனா என்று புலம்பினான் ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை. தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று அலுவலகத்தில் யாரிடமும் சொல்லவில்லை.
ஒரு வருடம் முடிந்து விட்டது எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள். ரபீக் தன் மனைவியிடம் காலி தொட்டியை நான் எடுத்து போகமாட்டேன் என்று சொன்னான். அவன் மனைவி அவனை சமாதானப்படுத்தி நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி செய்தீர்கள். செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை. நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.
ரபீக்கும் காலி தொட்டியை அலுவலகத்திற்-க்கு எடுத்து சென்றான். எல்லார் தொட்டியையும் பார்த்தான் விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன. இவன் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.
முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு சொன்னார். அருமை எல்லாரும் செம்மையாக செடியை வளர்த்து உள்ளீர்கள் உங்களில் ஒருவர் தான் இன்று பொறுப்பு ஏத்துகொள்ளபோகறீர்கள் என்றார். எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார். ரபீக் கடைசி வரிசையில் நின்றிருந்தான் அவனை அருகே வருமாறு அழைத்தார்.
ரபீக் தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார் என்று பயந்து கொண்டே சென்றான். முதலாளி ரபீக்கிடம் உன் செடி எங்கே என்று கேட்டார். ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவாரியாக சொன்னான்.
முதலாளி ரபீக்கை தவிர அனைவரும் உட்காருங்கள் என்றார். பிறகு ரபீக் தோளில் கையை போட்டுகொண்டு நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர்தான் என்றார். ரபீக்கிற்க்கு ஒரே அதிர்ச்சி தன் தொட்டியில் செடி வளரவே இல்லை பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார் என்று குழம்பிபோனார்.
சென்ற வருடம் நான் உங்கள் ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள் [Boiled seeds]. அந்த விதைகள் அவிக்கப்பட்டதால் அது முளைக்க இயலாது. நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால் அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்தீர்கள். ரபீக் மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டான், ஆகவே அவனே என் நிறுவனத்தை நிர்வாகிக்க தகுதியானவன் என்றார்.
நாம் சொல்லும் சொல் | நாம் பயணிக்கும் பாதை நேர்மையாக இருந்தால் வெற்றிகள் நம்மைத் தேடி வரும்…!
வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம் தான் உண்மையும் நேர்மையும் தர்மத்தை பாதுகாக்கும், நேர்மை ஒரு போதும் வீண்போகாது | நேர்மையை விதையுங்கள் | பதவியும் பணமும் தேடிவரும்....

~*~

குரங்கை நினைக்காதே...!

அரசனுக்கு வயதாகிக் கொண்டிருந்தது. தலைமுடி கொட்டி வழுக்கை அதிகமாகிக்கொண்டிருந்தது.
அரசனுக்கு தன் கம்பீரம் குறைந்து
விடும் என்ற கவலை அதிகமாகிப் போய் ஒரு நாள் அரசவைத் தலைமை மருத்துவனிடம் நிவாரணம் கேட்டான்.
தலைமை மருத்துவன் "மன்னா! இதற்கு மருந்தே கிடையாது" என்று உண்மையைச் சொன்னான்.
அரசனுக்கு அந்த பதில் பிடிக்கவில்லை. கோபமடைந்தான். ஆத்திரம்
தலைக்கேறி தலைமை மருத்துவனை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டான்.
ஊரில் இருக்கும் அனைத்து சிறந்த மருத்துவர்களையும் வரவழைத்தான்.
ஒரே வாரத்தில் தன் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு பிடிக்குமாறு
பணித்தான்.
மருத்துவர்கள் அனைவரும் கூடி விவாதித்தனர்.
அரசனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்றுதான் தீவிரமாக யோசித்துக்
கொண்டிருந்தார்கள்.
அவர்களில் ஒரு துடிப்பான இளைஞன் இருந்தான்.
பிரச்சினைக்குத் தன்னிடம் தீர்வு இருப்பதாகக் கூறினான். அனுபவம் முதிர்ந்த வயதான மருத்துவர்கள் கூட்டத்தில் இருந்தனர். அவனைப் பார்த்து சிரித்தனர்.
"வழுக்கைக்குத் தீர்வா? போய் வேறு வேலை இருந்தால் கவனியப்பா"
என்று கூறினர்.
நாள் செல்லச் செல்ல அவர்களுக்கு அரசனிடமிருந்து தப்பிக்கும் வழி தெரியவில்லை.
அரசனை இந்த நிலையில் சந்தித்தால் கண்டிப்பாகத் தலைமை மருத்துவனுக்கு நேர்ந்த கதிதான் தமக்கும் நடக்கும் என்று எல்லோருக்கும் புரிந்தது. கதி கலங்கிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது இளைய மருத்துவன் திரும்பவும் "என்னை
நம்பினால் நம் எல்லோருக்கும் விடிவு நிச்சயம்" என்று கூறினான்.
வேறு வழியில்லாமல் அனைவரும் அவன் வழியில் செல்ல ஒத்துக் கொண்டார்கள்.
அவனோ, மருந்தை நேரடியாக அரசனிடம்தான் தருவேன், என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான்.
அடுத்த நாள் சபை கூடியது. மருத்துவர்கள் இளைய மருத்துவனைக் கூட்டிக் கொண்டு அரசவைக்கு வந்தார்கள்.
அவன் அரசனிடம் ஒரு குடுவையைக் கொடுத்தான்.
"மன்னா இதில் இருக்கும் மருந்தை தினமும் சிரசில் தேய்த்துக் கொண்டு வந்தால், ஒரே மாதத்தில் முடி கொட்டுவது நின்று போகும்.
இரண்டே மாதத்தில் முடியில்லாத இடத்திலெல்லாம்
முடி வளர ஆரம்பிக்கும், ஆறே மாதத்தில் கருகருவென தலையெங்கும் தலைமுடி அழகாக வளர்ந்திருக்கும்" என்றான்.
மன்னனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. "இப்போதே அந்தப்புரத்திற்குப் போய்
தலையில் மருந்தைத் தடவிக் கொள்கிறேன்" என்று கிளம்பினான்.
அப்போது மருத்துவன் "மன்னா. இந்த மருந்து வேலை செய்ய வேண்டுமென்றால், அதைத் தலையில் தடவிக் கொள்ளும் போது மட்டும் நீங்கள் குரங்கை நினைக்கக் கூடாது!" என்றான்.
முட்டாள் மன்னன் சரியென்று சொன்னான்.
மந்திரியிடம் மருத்துவர்களுக்குப் பொன்னும் பொருளும் கொடுத்து சிறப்பாக மரியாதை செய்து அனுப்பி வைக்கச் சொல்லிவிட்டு அந்தப்புரத்திற்கு வேகமாகச் சென்று விட்டான்.
மருத்துவர்களும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஊரை விட்டே ஓடி
விட்டார்கள்.
அந்தப்புரத்திற்குச் சென்ற அரசன், அங்கு குடுவையைக் கையில் எடுத்து அதிலிருந்த மருந்தைத் தலையில் தேய்க்கப் போனான்.
அப்போது அவனுக்கு மருத்துவன் சொல்லிய பக்குவம் கவனத்திற்கு வந்தது. "குரங்கை நினைக்கக் கூடாது" என்று நினைத்தவுடன் குரங்கைப் பற்றி நினைக்க ஆரம்பித்து விட்டான்.
என்ன முயற்சித்தும் அவன் நினைவிலிருந்து குரங்கை அகற்ற இயலவில்லை.
மன்னனுக்கு மருத்துவனின் தந்திரம் புரியவில்லை.
சற்று நேரம் கழித்து முயற்சிப்போம் என்று வேறு வேலையில் ஈடுபட்டான்.
ஆனால் ஒவ்வொரு முறை அவன் மருந்தைக் கையில் எடுத்த போதும் மருத்துவனின் அறிவுரை மனதில் தோன்றி அவனுக்குக் குரங்கு பற்றிய யோசனை வந்து கொண்டே இருந்தது.
பல நாள் திரும்பத் திரும்ப முயற்சித்து விட்டு, இந்தச் சிரமத்திற்குப்
பேசாமல் வழுக்கையாகவே இருந்து விடலாம் என்று தீர்மானித்து விட்டான்.
நீதி -அதிகாரம், பலம் உள்ள சில முட்டாள்களின் முட்டாள்தனமான நடவடிக்கைகளை நேரடியாக எதிர்ப்பதைவிட அறிவைக்கொண்டு சாதுரியத்துடன் எதிர்கொள்வதே சிறப்பானதாகும்.

~*~

நட்டு

விஞ்ஞானி ஒருவர்.. தன் காரில் பயணம் செய்து கொண்டு இருந்தார்… வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது..
கடை ஏதும் இல்லை.. கடை குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கிறது..கூட யாரும் வராததால் அவரே டயரை மாற்ற ஆரம்பித்தார்..
அனைத்து போல்ட்டையும் கழட்டி விட்டு ஸ்டெப்னி எடுக்க போகும் போது கால் இடறி கீழே விழுந்தார்.. கையில் வைத்திருந்த போல்ட்கள் ஒரு குட்டையில் விழுந்து விட்டது..
இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருந்தார்..
அப்பொழுது கிழிந்த ஆடையோடு ஒரு வழிப்போக்கன் அந்த வழியாக வந்தான்.. அந்த வழிப்போக்கன், இவரைப்பார்த்து ஐயா என்ன ஆச்சு.. என்றான். இவரோ இவனிடம் சொல்லி என்ன ஆக போகிறது என்று எண்ணிய விஞ்ஞானி ஒன்றும் இல்லை நீங்கள் போகலாம்..என்றார்.
அந்த வழிப்போக்கன் கிளம்ப எத்தனித்தான்.. அந்த விஞ்ஞானிக்கு அப்பொழுது ஒரு எண்ணம் தோன்றியது.. இந்த சாக்கடை குட்டையில் இவனை விட்டால் யாரும் இறங்க மாட்டார்கள்,
அதனால் இவனை இறங்க சொல்லலாம் என்று எண்ணி அவனிடம், நான் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன், அந்த குட்டையில் விழுந்த என்னுடைய போல்ட்டை எடுத்து தாருங்கள் என்றார்..
ஒ.. இது தான் உங்கள் பிரச்சனையா..? ..நான் அந்த குட்டையில் இறங்கி எடுத்து தர ஆட்சேபனை ஏதும் இல்லை..
ஆனால் அதை விட ஒரு சுலப வழி இருக்கிறது..
மூன்று சக்கரங்களில் இருந்து தலா ஒரு போல்ட்களை கழட்டி இந்த சக்கரத்தை மாட்டி, அருகில் உள்ள மெக்கானிக் கடையில் 4 போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டி கொள்ளுங்கள் என்று சொன்னார்.
தான் இத்தனை பெரிய விஞ்ஞானியாக இருந்தும் நமக்கு இந்த சுலப வழி தெரியாமல் போய் விட்டதே என்றும்..
இவருக்கு மூளை இல்லை என்றும் தப்பாக நினைத்ததற்கு
வெட்கி தலை குனிந்தான்..
நீதி: யாரையும் குறைவாக எண்ணக்கூடாது.,
ஆம்..நண்பர்களே..,
உயிருள்ள பறவைக்கு எறும்பு உணவு;
உயிரற்ற பறவையோ எறும்புக்கு உணவு.
ஒரு மரத்தில் பல்லாயிரம் தீக்குச்சிகளை உருவாக்கலாம்.
அதே ஒரு தீக்குச்சியினால
பல்லாயிரம் மரங்களை அழிக்கலாம்.
நேரமும், சூழ்நிலையும் எப்பொழுதும் மாறலாம்
எனவே யாரையும் குறைவாக எண்ண வேண்டாம்.
நல்லதையே நினைப்போம்..
நாளும் நல்லதையே செய்வோம்.

~*~

சமயோசிதம்

ஒரு மான் தனது குட்டிகளுடன் காட்டில் விளையாடிக்கொண்டு இருந்த போது வழிதவறி சிங்கத்தின் குகைக்குள் சென்று விட்டது.
உள்ளே சென்றதும் சிங்கம் சாப்பிட்டு மீதம் வைத்திருந்த எலும்புகளை பார்த்து பயந்து, தன் குட்டிகளுடன் வெளியேற நினைக்கையில், வெளியே இரை தேட போயிருந்த சிங்கம் இரைகிடைக்காத விரக்தியில் திரும்ப வந்து விட்டது.
குகையினுள் ஆரவாரம் கேட்ட சிங்கமோ, இன்று நமக்கு நல்ல வேட்டைதான் என நினைத்து உள்ளே செல்ல எத்தனைக்கையில், சிங்கத்தை தூரத்திலே பார்த்து விட்ட புத்திசாலி மானோ, உடன் தன் குட்டிகளைப் பார்த்து பிள்ளைகளே நீண்ட நாட்களாக சிங்க கறி சாப்பிட வேண்டும் என ஆசைப்பட்டீர்களே, இது தான் சிங்கத்தின் குகை.
வெளியே சென்ற சிங்கம் திரும்ப வந்ததும் ஒரே அடியில் அடித்துக் கொன்று உங்களுக்கு சுவை மிக்க சிங்க கறி இன்று எப்படியாவது கொடுத்து விடுகிறேன் என்று சப்தமாக பேசியது.
அது குகையில் எதிரொலித்து சிங்கத்தின் காதை வந்தடைந்ததும், பயந்து போன சிங்கம் நம்மைவிட பெரிய வலிமையான விலங்கு நம்குகைக்குள் வந்து விட்டதே, நாம் உள்ளே சென்றால் நம்கதி அதோகதிதான் என நினைத்து விட்டால் போதும் என்று தலை தெறிக்க ஓடியது.
மானும் நிம்மதியாயிற்று.
இது முடிவல்ல தொடர்ந்து படியுங்கள்....!!
மூச்சிறைக்க ஓடி வந்த சிங்கத்தை வழியில் பார்த்த தந்திரம் மிக்க நரி ஒன்று என்ன விவரம் எனக் கேட்க சிங்கமும் நடந்ததை கூறியது. உடனே சிங்கத்தை பார்த்து ஏளனமாக சிரித்த நரி, நீதான் காட்டுக்கே ராஜா, உன்னை விட வலியையான விலங்கு இந்த காட்டிலேயே கிடையாது.
நீயே இப்படி பயந்து செத்தால் யார் உன்னைப் பார்த்து பயப்படுவார்கள்.
வா, நானும் உன்னுடன் வருகிறேன். குகைக்குள் சென்று அது எந்த விலங்கு என்று பார்த்து விடலாம். ஆனால் நீ அந்த விலங்கை அடித்துக் கொன்றால் எனக்கும் பாதி கொடுத்துவிட வேண்டும் என்ற ஒப்பந்தத்துடன் திரும்ப குகைக்கு சிங்கத்தை அழைத்து வந்து விட்டது.
இதை கவனித்துவிட்ட அந்த புத்திசாலி மான், இந்த முறை அதிக சத்தத்துடன் சிரித்து தன் குட்டிகளிடம், பார்த்தீர்களா தப்பியோடிய சிங்கத்தை, நரி நம்மிடம் ஒப்புக் கொண்டது போல் ஆசை வார்த்தை காட்டி அழைத்து வந்துவிட்டது.
ஆகவே நம் ஒப்பந்தப்படி சிங்கத்தை அடித்துக் கொன்று, நமக்கு பாதியும் நரிக்குப் பாதியாகவும் பிரித்துக் கொள்ளலாம். பிறகு ஒருநாள் உங்களுக்கு முழு சிங்கம் அடித்து கொடுக்கிறேன், அமைதியாக இருங்கள் என்றது.
அவ்வளவுதான் சிங்கம் சினத்தோடு நரியை துரத்த நரியோ ஓட்டமெடுத்தது.
மான்களும் நிம்மதியாக தனது புதருக்கு சென்று விட்டது.
ஆக எந்த ஒரு நிலையிலும் நாம் தடுமாறாமல் சமயோஜிதமாக, தீர்க்கமாக சிந்தித்து செயல்பட்டால், மலையளவு பிரச்சனையையும் சிறு கடுகு போல் சமாளித்து விடலாம்...!!!

~*~

Sunday 23 August 2015

சிங்கன்டா...!

இந்தியன் ஹோட்டல் ஒன்றில் ஒரு அமெரிக்கர் நுழைந்தார்.
”நிறுத்தாமல் அடுத்தடுத்து பத்து பொட்டலம் பிரியாணி சாப்பிடுபவர்களு க்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு.போட்டியில் தோற்றால் நீங்கள் எனக்கு பத்தாயிரம் ரூபாய் தரவேண்டும். சவாலுக்குத் தயாரா?”
என்று அறிவித்தார்.யாரும் அசையவில்லை.
நம்மாளு ஒருவர் மட்டும் எழுந்து அவசரமாக வெளியே போனார். இருபது நிமிடம்
கழித்து திரும்பி வந்தார். ”பந்தயத்துக்கு நான் தயார்” என்றார். அடுத்தடுத்து பத்து பொட்டலம் பிரியாணியை அவர்
காலி செய்து முடித்ததைப் பார்த்து,அமெரிக்கர் வியந்து போனார்.சொன்னபடி பரிசுத் தொகையை கொடுத்துவிட்டு, ”ஆமாம், எதற்காக முதலில் எழுந்து வெளியே போனீர்கள்?” என்று கேட்டார். ”பந்தயத்தில் என்னால் ஜெயிக்க முடிகிறதா என்று பக்கத்தில் உள்ள ஹோட்டலுக்குச் சென்று பத்து பொட்டலம் பிரியாணி சாப்பிட்டு பார்த்தேன்” என்றார்!!

~*~

Thursday 20 August 2015

பொய்யன்

ஒரு அரசன், நம்பக்கூடிய சிறந்த பொய்யை சொல்லும்ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.
நாட்டின் பல பகுதியிலிருந்து பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர். ஆனால் அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை.
ஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒருஏழை அரச சபைக்கு வந்து தான் அப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான். அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தார்.
அந்த ஏழை சொன்னான்,” அரசே, உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது. அதை வாங்கத்தான் இன்று இங்கு நான் வந்தேன்.” அரசனுக்கு கோபம் வந்து விட்டது.” நீ பொய் சொல்கிறாய் ..நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?’ என்று கத்தினான்.
உடனே ஏழை சொன்னான்,” அரசே,நீங்களே ஒத்துக் கொண்டுவிட்டீர்கள், நான் சரியான பொய் சொன்னேன் என்று. எனவே போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள்.” அரசன்,தான் அவசரத்தில் உளறிவிட்டோம் என்பதை உணர்ந்தான்.
உடனே சொன்னான்,” இல்லை, இல்லை, நீ பொய் சொல்லவில்லை.” என்று அவசரமாக மறுத்தான்.
ஏழை சொன்னான்,” நல்லது அரசே,நான் சொன்னது பொய் இல்லை, உண்மைதான் என்றால், எனக்கு தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுங்கள்,” அரசன் அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான்.

~*~

Tuesday 18 August 2015

மனைவி அமைவதெல்லாம்...

எமதர்ம மகாராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுத்தான். அவள் மானுடப் பெண் என்றாலும் அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்தது.
அதே மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனார் ஆனார் எமதர்மன். அவர் மணந்த பெண் நல்லவள் தான். என்றாலும் நாளாக நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது. மேல் உலகம் போய் தப்பி விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தார். ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால் மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை. தத்தளித்தார்.
மகன் கொஞ்சம் வளர்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார். அவனுடைய அம்மாவிடம் தனக்குள்ள பயத்தையும் விளக்கினார்.
"மகனே.. நீ சிறந்த வைத்தியனாக வேண்டும். மரணத் தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியும். எப்படித் தெரியுமா?
ஒருவர் மரணம் அடைவதாக இருந்தால் நான் அங்கு இருப்பேன். உனக்கு மட்டும் கண்ணுக்குத் தெரிவேன். நான் அங்கு இருந்தால் அவருக்கு வைத்தியம் செய்யாதே! நீ வைத்தியம் செய்து அவர் இறந்து போனால் உன் புகழ் குறையும். எனவே, யாருக்கு வைத்தியம் செய்தாலும் நான் அங்கு இல்லையென்றால் தைரியமாக மருந்து கொடு. அவன் பிழைத்து எழுந்து கொள்வான். அதனால் உன் புகழ் மேலும் மேலும் பரவும்" என்றார் எமன். மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல் மகனை அணைத்து கண்ணீர் விட்டு எமதர்மன் நழுவி விட்டார்.
மகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான். அவன் வைத்தியம் செய்தால் எப்படியிருப்பவனும் பிழைத்துக் கொண்டான். ஒருவர் கூடச் இறக்கவில்லை. எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். யாருக்காவது வைத்தியம் செய்யப் போகும் போது எதிரில் அப்பாவை (எமனை)ப் பார்த்தால், கும்பிட்டுவிட்டு வெளியே வந்து விடுவான். இந்த வைத்தியன் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது.
கொஞ்ச நாளில் அந்த ஊர் அரசரின் மகள் நோய் வாய்ப்பட்டாள். யார் வைத்தியம் பார்த்தும் பலனில்லை. இவனை அழைத்தார்கள்.
"என் மகளைக் காப்பாற்றினால் அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன், கூடவே என் ராஜ்ஜியத்தையும் தருகிறேன்" என்றார் ராஜா.
அவள் நோய் வாய்ப்பட்டு படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி. எமன் (அப்பா) நின்று கொண்டிருந்தார். வைத்தியம் செய்தால் பிழைக்க மாட்டாள். ஆனால் பிழைத்துவிட்டால் அழகான அந்த ராஜகுமாரி, ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும். இடைஞ்சலாக அப்பா குறுக்கே நிற்கிறார். எப்படி அவரை விரட்டுவது? பளிச்சென்று யோசனை பிறந்தது.
வாசல் பக்கம் பார்த்து கத்தினான். "அம்மா.. அப்பா உள்ளே தான் இருக்கார். ரொம்ப நாளா அப்பாவைக் காணோம் காணோம்னு தேடினேயே.. இங்க. வந்துப் பாரும்மா.. இங்கதான் இருக்கார்!" என்று அலறினான்.
அவ்வளவுதான்.. "துண்டைக் காணோம் துணியைக் காணோம்" என்று எமன் ஒரே ஓட்டம் தான்.
கதை எப்படி??
"மனைவி அமைவதெல்லாம்,
இறைவன் கொடுத்த வரம்"
சரிதானே??

~*~

ஞாயிறு 11மணிக்கு மரண தண்டனை ...!!

ஒ௫ தனியார் ஆஸ்பித்திரியில் ஐ.சி.யு வார்டில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட படுக்கையில் மட்டும் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையிலும் சரியாக 11மணிக்கு அந்த படுக்கையில் படுத்திருக்கும்நோயாளிகள் இறந்து போகிறார்கள். இது அந்த ஆஸ்பித்திரியில் இருக்கும் அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியையும், அச்சத்தையும் அளித்தது. பல நாடுகளிலிருந்து மிக சிறந்த மருத்துவர்களும் வந்து பார்த்துவிட்டு இறப்புகளுக்கு காரணம் தெரியாமல் குழம்பினர். மீண்டும் ஒரு ஞாயிற்று கிழமையில் என்ன தான் நடக்கிறது என்று பார்க்க மிக பெரிய மருத்துவ குழு ஒன்று 11மணிக்கு முன்னால் அந்த குறிப்பிட்ட படுக்கையை சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். என்ண ஆக போகிறதோ என்று அன்னைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்க.....
திடிரென உள்ளே நுழைந்தாள் ஞாயிற்று கிழமையில் மட்டும் பகுதி நேராமாக கூட்டி, பெருக்கும் வேலை செய்யும் முணியம்மா... வந்தவுடனையே நோயாளியின் ஆக்சிஜன் சப்ளை இயந்திரத்தின் PLUGகை பிடுங்கிவிட்டு தனது செல் போணை சார்ஜில் போட்டுவிட்டு கடமையே கண்ணாக அந்த அறையை பெருக்க ஆரம்பித்தாள்...
அடிங்கொய்யால...

~*~

நான்கு மெழுகுவத்திகள்...!

நான்கு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு இருந்தன. மெலிதாய்காற்று வீசிக்கொண்டு இருந்தது....
காற்றை கண்டதும்‘ அமைதி ‘ என்ற முதல் மெழுகுவர்த்தி ‘ ஐயோ காற்று வீசுகின்றது, நான் அணைந்துவிடுவேன் என்று பலவீனமாக சொன்னது. காற்று பட்டதும் அணைந்துவிட்டது.
‘அன்பு ‘ என்ற அடுத்த மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாது’என்று அணைந்துவிட்டது.
அறிவு ‘ என்ற மூன்றாவது மெழுகுவர்த்தியும்...
காற்றை எதிர்க்க முடியாமல்அணைந்தது.
நான்காவது மெழுகுவர்த்தி மட்டும் காற்று வீசிய
சில நொடிகள் போராடி ஜெயித்துவிட்டது.
அப்போது அந்த அறையில் ஒரு சிறுவன் நுழைந்தான்.‘அடட
ா மூன்று மெழுகுவர்த்திகளும் அணைந்துவிட்டதே என்று கவலையுடன் சொன்னான்.
அதற்கு எரிந்துகொண்டு இருந்த நான்காவது மெழுகுவர்த்தி சொன்னது,வருத்தப்படாதே நான் இருக்கின்றேன். என்னை வைத்து மற்றமூன்றையும் பற்ற வைத்துகொள்’ என்றது.
சிறுவன் உடனே..‘
நான்காவது மெழுகுவர்த்தியை பார்த்து ” உன்பெயர் என்ன ?”என்று கேட்டான் .
'நம்பிக்கை' என்றது மெழுகுவர்த்தி.
நாம் எப்பொதும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும்இழக்கக் கூடாது.

~*~

Monday 17 August 2015

மகளின் பரிசு ...!

பெண் குழந்தைகள் இருக்கும் வீடு தேவதைகள் வாழும் வீடு
ஒரு முறை ஐந்து வயது பெண் குழந்தை தன் அப்பாவின்
மூக்கு கண்ணாடியை தவறுதலாக கீழே போட்டு உடைத்து விட்டது.
அவள் அ...ப்பா அந்த குழந்தையை கடுமையாக திட்டி விட்டார்....
அன்று இரவு முழுவதும் அந்த பெண் தன் அப்பாவுக்காக ஒரு பரிசு தயார் செய்து, அடுத்த நாள் தன் தந்தையிடம்
கொடுத்தாள். அதை பிரித்து பார்த்த அவர் அதில் ஒன்றும்
இல்லாததை பார்த்து மீண்டும் கோபமுற்றார்.
யாருக்காவது பரிசு கொடுக்கணும்னா அதில் எதாவது பொருள் வைத்து கொடுக்கனும்மா நீ வெறும் பெட்டியை கொடுப்பது தவறு என்று கண்டித்தார்.
அந்த குழந்தை சிரித்து கொண்டே ஆர்வத்துடன் சொன்னது நான் இரவு முழுவதும் 1000 முத்தங்களை அந்த பெட்டிக்குள்ள கொடுத்து, மூடி தான் உங்களிடம் தந்தேன் என்றாள்.
அதைக் கேட்ட அவரது தந்தை அந்த குழந்தையை இறுக்கி அணைத்து மன்னிச்சிக்கோமா உன் அன்பு புரியாமல்
உன்னை திட்டிட்டேன் என்றார்.
அவர் தன் தலையனை அடியில் அந்த பெட்டியை வைத்து கொண்டார். எப்போது எல்லாம் அவர் மனம் வருத்தமடைகிறதோ அப்போது எல்லாம் தன் மகளின் அன்பு முத்தத்தை அந்த பெட்டியை திறந்து எடுத்து கொண்டார்.

~*~

அடமானம்

ராக்கேஷ் ஒரு பேங்க்-கின் கிராமத்து பிராஞ்ச் அதிகாரி.
அவனிடம் அன்று ஒரு ஆதிவாசி ஆள் லோன் கேட்டு வந்தார்.
ராக்கேஷ் லோன் அப்ளிகேஷனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு கேட்டான்.
“எதுக்காகப் பணம் வேணும்…?”
அந்த ஆதிவாசி ஆள் பதில் சொன்னார்.
“கொஞ்சம் மாடு வாங்கி பால் வியாபாரம் பண்ணலாம்னு இருக்கேன்…!”
“அடமானமாய் என்ன தருவீங்க…?”
ஆதிவாசி ஆள் லேசாய் குழப்பத்துடன் கேட்டார்.
“அடமானம்னா என்ன..?”.
“நீங்க கேக்கற பணத்தோட மதிப்புக்கு சமமா ஏதாவது சொத்து கொடுத்தாத் தான் பேங்க் பணம் கொடுக்கும்.அதைத்தான் அடமானம்னு சொல்லுவோம்…!”
ஆதிவாசி ஆள் சொன்னார்.
“கொஞ்சம் நிலம் இருக்கு… ரெண்டு குதிரை இருக்கு… எது வேணுமோ அதை நீங்க எடுத்துக்கலாம்…!”.
ராக்கேஷ் இன்னும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, நிலத்தை அடமானமாக வைத்துக் கொண்டு அவருக்குப் பணத்தை லோனாகத் தர ஏற்பாடு செய்தான்.
சில மாதங்கள் கழிந்தது.
அந்த ஆதிவாசி மீண்டும் பேங்கிற்கு வந்தார்.
தன்னுடைய கணக்குப் புத்தகங்களை எடுக்கச் சொன்னார்.
பைசா பாக்கியில்லாமல் கடன், வட்டி எல்லாவற்றையும் கணக்குப் போட்டு செட்டில் செய்தார்.
ராக்கேஷ் ஆச்சர்யத்துடன் கேட்டான்.
“கடன் எல்லாவற்றையும் கட்டியாகிவிட்டது. லாபம் எதுவும் இல்லையா…?”
அந்த ஆதிவாசி உற்சாகமாய்ப் பதில் சொன்னார்.
“லாபம் இல்லாமலா…? அது கிடைச்சது நிறைய…!”.
ராக்கேஷ் ஆர்வத்துடன் கேட்டான்.
“அதை எல்லாம் என்ன செய்தீர்கள்..?”.
“என்ன செய்யறது… பொட்டில போட்டு வச்சிருக்கேன்…!”.
ராக்கேஷ் யோசித்தான்.
‘இந்த மாச டார்கெட்க்கு சரியான ஆளாக் கிடைச்சுட்டான்…!’ என்று நினைத்தபடியே,”ஏன் நீங்க பணத்தை எங்க பேங்க்ல டெபாசிட் பண்ணலாமே…?” என்றான்.
ஆதிவாசி கேட்டார்.
“டெபாசிட்னா என்ன…?”.
ராக்கேஷ் விளக்கமாய்ப் பதில் சொன்னான்.
“நீங்க உங்க பேர்ல ஒரு கணக்கை ஆரம்பிச்சு… அதில உங்க பணத்தை போட்டு வச்சா… உங்க சார்பா பேங்க் உங்க பணத்தப் பார்த்துக்கும். உங்களுக்கு எப்ப எப்ப பணம் தேவையோ அப்ப அப்ப நீங்க பணத்தை எடுத்துக்கலாம்…!”.
கேட்டுக் கொண்டிருந்த அந்த ஆதிவாசி நபர் சற்றே சேரில் சாய்ந்து உட்கார்ந்தபடி கேட்டார்.
“அடமானமாய் என்ன தருவீங்க…?”.

~*~

Sunday 16 August 2015

திகில் கதை...!!

பயங்காரமான திகில் கதை.....
சங்கா் தன் காரில் பக்கத்து ஊரில் இருந்து வந்து கொன்டு இருந்தான்.இரவு8 மணி தான் இருந்தால் பயங்கரமான இருட்டு.மழைவேறு பெய்ய தொடங்கியது.ஆள் நடமாட்டம் இல்ல சாலையில் வண்டியை ஓட்டி கொண்டுவந்தான் .தூரத்தில் யாரோ குடையுடன் நிற்பது தெரிந்தது.இவன் வண்டி நிப்பாட்ட சொல்லி சைகை செய்தார்.சங்கருக்கு மனதில் ஒரே குழப்பம் வண்டியை நிப்பாட்டுவதா இல்லை வேண்டாமா என்று.தைரியத்துடன் வண்டியை நிருத்தினான்.மிகவும் வயதானவர் ஒரு கையில் குடையும் மற்றோரு கையில் பெட்டியும் வைத்து இருந்தார்.
அவன் கண்ணாடியை மற்றும் இரக்கி என்ன வேண்டும் என்று கேட்டான்.அதர்க்கு அவர் தன் பெட்டியில் இருந்து இரண்டு புத்தகத்தை நீட்டி வாங்கி கொள்ளும்படி சற்று உயார்த்திய குரலில் சொன்னார்.
அவனும் பயத்தில் வாங்கி கொண்டான்.விலை3000 என்றார் அவனும் காசை கொடுத்துவிட்டு கிளாம்ப பார்த்தான்.ஆனால் அந்த முதியவரோ இவனுக்கு கட்டளை இட்டார் இந்த புத்தகங்களின் கடைசி பக்கத்தை பார்க்காதே மீறி பார்த்தால் அதிர்ச்சியில் உயிர் போய்விடும் என்றார்.
சாங்கர் சரி என்று வாக்கு கொடுத்து விட்டு வீடு வந்து சேர்ந்தான்.புத்தகங்களை படிக்க தொடங்கினான்.திகில் நிறைந்த கதைகளாய் இருந்தது.புத்தகத்தை படித்து முடித்தான் கடைசி பக்கத்தை பார்காமல் முடிவைத்தான்.
நாட்கள் சென்றன ஆர்வம் தாங்காமல் ஒருநாள் கடைசி பக்கங்களை பார்த்தான் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தான்.கடைசி பக்கத்தில் எழுதி இருந்தது என்ன தெரியுமா உங்களுக்கு?
புத்தகத்தின் விலை15ரூபாய் மட்டுமே.


Saturday 15 August 2015

மகள். ..!

திருமணமான அன்று அந்த இளம் தம்பதியினர் அவர்களுக்குள் ஒரு போட்டி வைத்து கொண்டனர். அதாவது இன்று முழுவதும் யார் கதவை தட்டினாலும் நாம் திறக்க கூடது என்பது தான் அந்த போட்டி.

போட்டி துவங்கிய சில மணி நேரத்திலே கணவரின் பெற்றோர்கள் கதவை தட்டினர். கணவர் கதவை திறக்கலாம் என்று நினைக்கும் போது, போட்டி நியாபத்துக்கு வரவே கதவை திறக்காமலே இருந்தார். அவரின் பெற்றோரும் சிறிது நேரம் கதவு அருகிலேயே நின்றிருந்து, கதவு திறக்காததால் சென்று விட்டனர்.

சில மணி நேரத்தில் அந்த பெண்ணின் பெற்றோர் கதவை தட்டினர். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். மனைவியால் தன் பெற்றோர் வெளியே நிற்பதை பார்க்க முடியாமல் கண் கலங்கி கொண்டே "என்னால் இனி மேலும் சும்மா இருக்க முடியாது" என்று கூறியவாரே கதவை திறந்து விட்டாள். கணவரும் ஒன்றும் சொல்லவில்லை .

நாட்கள் உருண்டோடின. அவர்களுக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர். அவள் கணவர் தனக்கு மகள் பிறந்ததை கொண்டாட பெரிய விருந்து ஏற்பாடு பண்ணினார். மகிழ்சியுடன் விருந்து நடந்து முடிந்தது. அன்று இரவு அவர் மனைவி, "நமக்கு மகன்கள் பிறந்த போது இந்த அளவு நீங்கள் கொண்டாடவில்லையே ஏன்? என்று கேட்டார். அதற்கு அந்த‌ கணவர் சொன்னார், "என் மகள் தான் நாளை எனக்காக கதவை திறப்பாள்"

பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள். பெண்மையை போற்றுவோம்!!!

~*~

Friday 14 August 2015

கடவுள்!

ராஜேஷ் முடிவெட்டிக் கொள்ள வழக்கமாகச் செல்லும் கடைக்குச் சென்றான். முடிதிருத்துபவர் அவனுக்கு நெருக்கமான நண்பர். இருவரும் பல விஷயங்கள் பற்றி மகிழ்ச்சியாக உரையாடுவர்.

அன்றும் அப்படியே பலவிஷயங்கள் பற்றி பேசினர். இடையில் கடவுளைப் பற்றிப் பேச்சு வந்தது. முடிதிருத்துபவர், ""எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. கடவுள் இருக்கிறார் என்று நான் நம்ப மாட்டேன்!'' என்றார்.

""ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?'' என்று கேட்டான் ராஜேஷ்.

""காரணம் மிகச் சுலபமானது. தெருவில் போய்ப்பாருங்கள். கடவுள் இருந்தால் நோயால் வாடுபவர்கள் இருப்பார்களா? கடவுள் இருந்தால் கைவிடப்பட்ட குழந்தைகள் தெருவில் அலையுமா? கடவுள் இருந்தால் துன்பமும், வலியும் இராது. இதையெல்லாம் அனுமதிக்கும் கடவுள் நிச்சயம் இருப்பார் என்று நான் நம்பவில்லை,'' என்றார் முடிதிருத்துபவர்.

ராஜேஷ் அதற்கு மறுப்பு சொல்லவில்லை. வீணாக விவாதத்தை வளர்க்க வேண்டாம் என்று மவுனமானார்.

முடிதிருத்தும் வேலைமுடிந்து, ராஜேஷ் வெளியே போனார்.

அவர் போன சற்று நேரத்தில், வீதியில் நீண்ட தாடியும் அடர்ந்த முடியுமாய், ஒரு ஆள் நிற்பதை கடைக்காரர் பார்த்தார்.

அந்த ஆளைப் பார்த்தால், முடிதிருத்தும் கடையை மாதக் கணக்கில் எட்டிப் பார்க்காதவர் போலத் தோன்றியது. அவ்வளவு அடர்ந்தும், சடைபிடித்த முடியும் தாடியும் இருந்தன.

அப்போது முன்னால் வந்து போன ராஜேஷ் மீண்டும் கடைக்கு வந்தார்.
""என்ன?'' என்று கேட்டார் முடிதிருத்துபவர்.

""ஒரு விஷயம்! முடிதிருத்துபவர் யாருமே இல்லை என்று சொல்லலாம்,'' என்று வந்தேன்.

""என்ன உளறுகிறீர்? இதோ! நான் இருக்கிறேன். நானும் ஒரு முடிதிருத்துபவன் தானே? அப்படி இருக்க முடிதிருத்துபவரே இல்லை என்று எப்படி நீங்கள் சொல்லலாம்?'' என்று எரிச்சலாக கேட்டார் முடிதிருத்துபவர் .
""இல்லை! முடிதிருத்துபவர் இருப்பது உண்மை என்றால் அதோ தெருவில் நிற்கிற அந்த ஆசாமி இப்படி அலங்கோலமான தலைமுடி, சிக்குப்பிடித்த தாடியுடன் இருப்பானேன்?'' என்று கேட்டார் ராஜேஷ்.

""ஓ! அதுவா? விஷயம் என்னவென்றால், அந்த ஆசாமி என்னிடம் வருவதில்லை!'' என்றார் முடிதிருத்துபவர்.

""சரியாகச் சொன்னீர்கள். அதுதான் விஷயம். கடவுளும் இருக்கவே செய்கிறார். ஆனால், என்ன நடக்கிறது என்றால், மக்கள் அவரை அணுகுவதில்லை. அவரைத் தேடிப் போவதில்லை. அதனால்தான் எங்கும் நிறைய துன்பமும், வேதனையும் உலகில் நிறைந்துள்ளன!'' என்றார் ராஜேஷ்.
உண்மையை உணர்ந்தார் முடிதிருத்துபவர்.

~*~