Tuesday 3 March 2020

பிரித்விராஜன்

அது கிபி 1191ம் ஆண்டு , இந்தியா மேல் முதன்முறையாக படையெடுத்தான் கோரி முகமது

ஆப்கனையும் இன்னும் சில நாடுகளையும் கைபற்றியபின் அவன் டெல்லி நோக்கி வந்தான், அவனை அரியானாவின் தராய் அருகே எதிர்கொண்டான் பிரித்விராஜன்

மிக கடுமையான யுத்தம் அது, வில்வித்தை முதல் வாள்வீச்சு வரை மிக பெரும் வீரம் காட்டி நின்ற பிரித்விராஜன் முன்னால் கோரியால் நிற்க முடியவில்லை

ஆப்கனை அடக்கிய கோரி முகமது பிரித்வி முன்னால் திணறினான், ஒரு கட்டத்தில் கோரி முகமதுவினை வளைத்துபிடித்தான் பிரித்வி

அன்றே கோரியின் தலையினை சீவியிருந்தால் இந்திய வரலாறே மாறியிருக்கும், ஆனால் உயிர்பிச்சை அளித்து அவனை ஆப்கனுக்கு விரட்டினான் பிரித்வி

அடிபட்ட பாம்பாக ஆப்கன் திரும்பிய கோரி அவமானத்தில் நொந்தான், பெரும் படை திரட்டி மறுபடியும் டில்லி நோக்கி வந்தான்

இம்முறை வலுவான குதிரைபடையோடு வந்தான் கோரி, பிரித்விராஜனிடம் யானைபடை  வலுவாக இருந்தது என்பதால் அரபு குதிரைகள் சகிதம் வலுவாக வந்தான் கோரி

இம்முறை கோரியினை விடவே கூடாது என முடிவு செய்த பிரித்வி பல மன்னர்களை திரட்டினான், அப்படியே மாமன் ஜெயசந்திரனிடமும் உதவி கேட்டான்

ஜெய்சந்திரனோ பகைமையினால் உதவ மறுத்தான், உதவ சென்றவர்களையும் தடுத்தான் ஆயினும் களம் கண்டான் பிரித்வி

உதவ மறுத்ததோடு இல்லாமல் கோரிக்கு ஆதரவான காரியங்களை செய்தான் ஜெயசந்திரன்

தன் இருபெரும் எதிரிகளை தனியாக சந்தித்தான் பிரித்வி, 

போரில் மாவீரம் காட்டி நின்ற பிரித்வியினை கோரியினால் வெல்ல முடியவில்லை, ஆயினும் அவன் திரட்டி வந்த பெரும்படை அவனுக்கு பலமாக களத்துக்கு வந்து கொண்டே இருந்தது , யுத்தம் நீடித்தது 

 யுத்த நெறிகளை மீறி காட்டுமிராண்டிதனமான போரில் ஈடுபட்ட கோரி, நள்ளிரவில் பாசறையில் புகுந்து பிரித்வியினை பிடித்தான், இதற்கு ஜெயசந்திரனின் கொடூரமான திட்டமும் இருந்தது

துரோகத்தால் வீழ்த்தபட்டான் பிரித்வி

கடந்த முறை தனக்கு உயிர்பிச்சை அளித்தவன் என்ற நன்றி கூட இல்லாமல் அவனின் கண்களை குருடாக்கினான் கோரி

எதிரி வென்றதும் ராஜபுத்திர பெண்கள் என்ன செய்வார்களோ அதை சம்யுக்தாவும் செய்தாள், ஆம் தீகுளித்து இறந்தாள் அவளோடு பல பெண்கள் செத்தனர்

டெல்லியினை வென்ற கோரி மற்ற ஆப்கன் மன்னர்களை போல கொள்ளை அடித்துவிட்டு ஓடவில்லை, தன் அடிமைகளில் ஒருவனை தன் பிரதிநிதியாக அமர்த்தினான்

அத்தோடு மிக முக்கியமான காரியத்தை செய்தான், ஆம் தனக்கு உதவிய ஜெயசந்திரனை கொன்றான் கோரி. எதற்காக என்றால் அந்நாளைய வழக்கபடி பிரித்வியின் நாடு ஜெயசந்திரன் பக்கம் போயிருக்கும், கொள்ளைகளோடு கோரி ஊர் திரும்ப வேண்டி இருக்கும்

ஜெயசந்திரன் கணக்கு இதுதான், ஆனால் கொடூரமான கோரி காரியம் முடிந்ததும் அவனை காவு வாங்கினான்

குருடானான பிரித்விராஜனை வைத்து தன் சபையில் வேடிக்கை காட்டுவது அவனுக்கு வழக்கமாயிருந்தது

பைபிளில் சாம்சன் எனும் மாவீரனை மொட்டை அடித்து பிலிஸ்தியர் கண்களை குருடாக்கி கட்டி போட்டு வித்தைகாட்டினர் அல்லவா?

அதே காட்சிகள்

பலசாலி அகபட்டால் உடனே அவனை குருடனாக்கி அவனை தடுமாற வைத்து ரசித்து பழிவாங்கும் கொடூர பழக்கம் அன்று இருந்திருக்கின்றது

குருடனான பிரித்வியினை அடிக்கடி சபையில் நிறுத்தி அவமானபடுத்தி விளையாடுவது அவனுக்கு வழக்கமாயிற்று

"ஒரு நாள் நீதான் பெரும் வில்லாளி ஆயிற்றே? இப்பொழுது வில்லும் அம்பும் கொடுத்தால் சரியாக அடிப்பாயா?" என நகையாடினான் கோரி

தன்னால் ஒலிவரும் இலக்கினை துல்லியமாக தாக்கமுடியும் என்றான் பிரித்வி

அரை போதையில் இருந்த கோரி,  அவன் கையில் வில்லை கொடுத்து, இப்பொழுது மணி ஒலிக்கும் அதுதான் இலக்கு நீ அதை சரியாக அடிக்க வேண்டும் என உத்தரவிட்டதுதான் தாமதம்

மிக சரியாக கோரியின் மேல் அம்பை செலுத்தினான் பிரித்வி

ஆம், ஓய்வு என்பதாலும் பிரித்வி குருடன் என்பதாலும் கவச உடை இன்றி உத்தரவிட்ட கோரியினை, அவன் குரல் வந்த திசை நோக்கி மிக சரியாக அம்புவிட்டு கொன்றான் பிரித்வி. 

அதன் பின்பு பிரித்வி கொல்லபடுகின்றான், அவனுக்கு வயது 24

24 வயதிற்குள் மங்கா புகழ்பெற்றவன் பிரித்வி, கோரி முகமதுவினை முதலில் ஓட அடித்தவன் அவனே

இந்தியரிடையே ஒற்றுமை இருந்தால் இரண்டாம் முறையும் அவனால் வென்றிருக்க முடியும், ஜெயசந்திரனின் துரோகமும் பிரித்வியினை சாய்த்தது

துரோகத்தால் வீழ்த்தபட்டான் மாவீரன் பிரித்வி, அவனின் வாழ்வும் காதலும் வீரமும் கடைசியில் பழிதீர்த்த நுட்பமும் மங்கா காவிய பாடல்களாயின

இன்றும் வட இந்தியாவின் கிராமிய பாடல்களில் அவன் கதையும் காவியமும் உண்டு

ஆப்கானிய கொடூர மன்னர்களை மாவீரனாக எதிர்கொண்ட அவனின் பெயரை இந்தியா தன் ஏவுகனைக்கு சூட்டியது

ஆம் இந்தியா தன் ஏவுகனைக்கு "பிரித்வி " என‌ அவன் பெயரையே சூட்டியது

இதை கவனித்த பாகிஸ்தான் அவசரமாக சீனாவிடமிருந்து ஏவுகனை வாங்கிய பாகிஸ்தான் அதற்கு "கோரி" என பெயரிட்டு வைத்திருக்கின்றது

900 ஆண்டுகளை கடந்தாலும் கோரியும் பிரித்வியும் இன்றும் ஏவுகனைகளாக எதிர் எதிரே நிற்கின்றார்கள்

நிச்சயம் பிரித்வி இனி தோற்கமாட்டான், காரணம் அன்று அவனுக்கு துரோகம் செய்ய‌ ஜெயசந்திரன் இருந்தான் இன்று மொத்த இந்தியாவும் அவனுக்கு ஆதரவாய் இருகின்றது

பிரித்த்வி மேம்படுத்தபட்டு பாகிஸ்தானின் எந்த மூலையினையும் அணுகுண்டோடு தாக்கும் அளவு வலிமையானதாக இந்தியாவின் பாதுகாப்பாக நிற்கின்றது

அதில் பிரித்விராஜன் வாழ்ந்துகொண்டே இருக்கின்றான்