Sunday 5 November 2017

நான் யார்? ?

*இந்த உலகத்திலேயே மிக மிக கஷ்டமான கேள்வி "நான் யார்?" என்பது தான்.*

இதுவரை நான் படித்த ஆன்மீக புத்தகங்களில் அப்புத்தக ஆசிரியர்கள், "நீ யார்?" என்பதை முதலில் கண்டுபிடி என்று கூறும்போதெல்லாம் குழம்பிப் போய் இருக்கிறேன்.

சில சமயங்களில், "அட போங்கடா", என்று அந்தக் கேள்வியைத் தூக்கி ஓரத்தில் வைத்து விட்டு மற்ற வேலைகளைப் பார்க்கப் போய் இருக்கிறேன்.
"நான் என்பது உன் பெயரா?"
"நான் என்பது உன் உடலா?"
"நான் என்பது நீ கண்ணாடியில் பார்க்கிறாயே அந்த முகமா?"
- இது போன்ற கேள்விகள் வந்த போதெல்லாம் முதலில் எரிச்சல் அடைந்திருக்கிறேன்.
...
காலப் போக்கில், இந்த அனைத்து கேள்விகளும் என் மூளைக்குள் ஏதோ வேலை செய்து அலசி ஆராய்ந்து என்னென்னமோ பதில்களைத் தந்தன... என் புரிதலை, வாசித்துக் கொண்டிருக்கும் நண்பர்களாகிய உங்களுக்குக் கடத்த விரும்புகிறேன்.
............

முதலில் சில கேள்விகள்:
1. உடல் - உயிர் - ஆன்மா: இந்த மூன்றும் ஒன்றா?
2. இந்த மூன்றில் உயிருக்கும் ஆன்மாவிற்கும் உங்களால் வித்தியாசம் கண்டு கொள்ள முடிகிறதா?
3. உடலுக்கும் உயிருக்குமான தொடர்பு என்ன?
4. உயிருக்கும் ஆன்மாவுக்குமான தொடர்பு என்ன?
உடலுக்கும் ஆன்மாவுக்குமான தொடர்பு என்ன?
5. உயிர் என்பது உடலுக்கா? ஆன்மாவிற்கா?
..........

மேற்கூறிய இந்த கேள்விகளுக்கு பதில் தெரியாவிட்டாலும் குறைந்த பட்சம், கேள்வியாவது புரிந்ததா? சரி... மேலும் சில கேள்விகள்:
........
நண்பர்களே... நீங்கள் யோசித்துப் பார்த்தது உண்டா?
ஒரு குடும்பத்தில் அப்பாவும் அம்மாவும் பரம சாதுவாக இருப்பார்கள், ஆனால், அவர்கள் மகன் ஊரில் பெரிய ரௌடியாக இருப்பான்.
ஒரு குடும்பத்தில் நான்கு பேர் அண்ணன் தம்பிகள் என்றால், அதில் ஒருவன் 1165 மதிப்பெண் எடுத்திருப்பான் 12 ம் வகுப்பில்.... இன்னொருவன் 650 மதிப்பெண் எடுத்திருப்பான்...
ஒரு குடும்பத்தில் யாரும் எதிர்பாராத வண்ணம் திடீர் என்று ஒருவன் சன்யாசம் சென்று விடுவான்.
....
நண்பர்களே... நீங்கள் யோசித்துப் பார்த்தது உண்டா?
விஞ்ஞானம் சொல்வது உண்மை என்றால், x y கிரோமோசோம் கணக்கில் இன்னார்க்கும் இன்னார்க்கும் பிறந்த குழந்தை இப்படித் தான் இருக்க வேண்டும் என்று விஞ்ஞான அடிப்படை சூத்திரத்தில் மேலே நான் கூறிய அந்த குடும்ப நிகழ்வுகள் எப்படி நடந்திருக்க முடியும்.. நீங்கள் என்ன தான் தாத்தா பாட்டி, கொள்ளு தாத்தா வரைக்கும் வரைபடம் போட்டாலும் x y கிரோமோசோம் சொல்கிற விஞ்ஞானத்தால் இந்த "நான் யார்?" என்கிற கேள்வியை விளக்கி விட முடியாது...

முந்தைய ஜென்மத்தில் ஆன்மீக வளர்ச்சி அடைந்த மனிதன் தான் இந்த ஜென்மத்தில் திடீர் சன்யாசம் சென்று விடுகிறான்.
முந்தைய ஜென்மத்தில் சேர்த்து வைத்த ஞானம் தான் இந்த ஜென்மத்தில் 1165 மதிப்பெண் பெற வைத்தது.
...
இப்போது யோசித்துப் பாருங்கள், நண்பர்களே... இப்போது நீங்கள் அனைவரும் என்ன நிலையில் இருக்கிறீர்களோ அது எல்லாம், நீங்கள் பல ஜென்மங்களாக சேமித்து வைத்த வாழ்வு.
அந்த ஒரே காரணத்தால் தான் எனக்கு இந்த உலகில் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவர் மீதும் தனிப்பட்ட மரியாதை உண்டு, ஏனென்றால், முன் ஜென்மங்களில் நல்ல செயல்கள் செய்யாமல்   உனக்கு மனிதப் பிறவி என்கிற ப்ரோமோஷன் கிடைக்க வாய்ப்பில்லை.
...
ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள்:
தினமும் நான் புறாக்களுக்கு உணவு போடுவதுண்டு... அந்தப் புறாக்கள் உணவு உண்பதை அப்படியே ரசித்துப் பார்ப்பது என் வழக்கம். அவற்றில் ஒரு புறா, மற்ற புறாக்களை அடித்து விரட்டும்... வேறு யாரையும் அந்த தானியங்களைக் கொத்தி தின்ன விடாது. ஒரு நாள் இன்னொரு புறாவின் கண்ணிலேயே கொத்தி விட்டது..இது தினசரி  தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அந்தப் புறாவைப் பார்க்கும் போதெல்லாம் நினைப்பேன்: "ஏன் இப்படி கொடுங்கோல் ஆட்சி செய்கிறாய்? உனக்கு இன்னும் எத்தனைப் பிறப்புகள் கடந்து மனிதப் பிறவி கிடைக்குமோ?" என்றெல்லாம் எனக்குள் புலம்பிக் கொள்வேன்.
...
நண்பர்களே...நாம் மனிதனாகப் பிறந்தது நாம் சேர்த்து வைத்த சொத்து..  நீங்கள் இன்று என்ன குணம் படைத்தது இருக்கிறீர்களோ அது நீங்கள் யுகம் யுகமாக சேமித்து வைத்த குணம்... இந்த புரிதல் வந்து விட்டால் போதும் "நான் யார்?" என்ற கேள்விக்கான பதில் தேடும் முனைப்பின் முதல் படியில் நிற்கிறீர்கள் என்று பொருள்..
...
வாழ்க்கையில் சேட்டை செய்யும் மனிதர்களைப் பார்க்கும் போதெல்லாம் மிகப் பரிதாபமாக இருக்கும்.. "எவ்வளவு கஷ்டப் பட்டு அடைந்த இந்த மனிதப் பிறவியை, அந்த குணத்தை இப்படி சீரழித்துக் கொள்கிறானே, இவன் தன் ஆன்ம பயணத்தை அறியாத ஒரே காரணத்தால் இப்படி ஆன்மாவை கீழ்நிலைக்கு கொண்டு செல்கிறானே," என்று தோன்றும்...
...
கிளாஸ் ல first ரேங்க் வாங்கிய மாணவன் திடீர் என்று திமிர் பிடித்துப் போய் கடைசி ரேங்க் வாங்குவது போன்றது, மனிதப் பிறவி என்கிற first ரேங்க் வரை வந்து விட்டு ரௌடித்தனம் செய்வது...
...
தன்னை அறிந்த மனிதன் எவனும் எந்த விதமான வன்முறையிலும் ஈடுபட மாட்டான்.
தன்னை அறிந்தவன் எந்த உயிரையும் கொல்ல மாட்டான்.
தன்னை அறிந்தவன் automatically சைவ உணவு உண்ண தொடங்கி விடுவான்.
தன்னை அறிந்தவன் மரணத்துக்குப் பின் பிறப்பு மறுபடியும் உண்டு என்பதை நம்புவான்.
தன்னை அறிந்தவன் இந்தப் பிறப்புகளை நிறுத்த என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பான்.
தன்னை அறிந்தவன் எப்போதும் தன்னுடைய குணம் பாழ் பட்டுப் போவதை அனுமதிக்க மாட்டான்.
தன்னை அறிந்தவன் முடிந்தவரை தனிமையாக இருப்பான்.
...
நீங்கள் நிறைய தனிமையாக இருந்து பாருங்கள் - உங்கள் ஆன்மா உங்களிடம் பேசும். நீங்கள் இத்தனைப் பிறவிகளில் எப்படியெல்லாம் கடந்து வந்தீர்கள் என்பதை உணர வைக்கும்.

மக்களுடன் கலக்க கலக்க நரகத்துக்குள் சென்று விடுவது போல், நம் ஆன்மாவை உணர முடியாமல் போய் விடுகிறோம்.

உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஆன்மா என்கிற விஷயத்தில் வேறு வேறு தளத்தில் இருப்பீர்கள்... ஒரு தந்தை தன்னை அறியாத மிருகமாக இருக்கலாம், அவருடைய மகன் முற்றும் துறந்த மனிதனாக இருக்கலாம்... இதெல்லாம் விஞ்ஞானம் பதில் சொல்ல முடியாத, கிரோமோசோம் சமாச்சாரம் இல்லாத எல்லை இது...
...
தன்னை அறிதல் தொடர்பாக எழுத வேண்டும் என்றால் நிறைய இருக்கிறது....
உங்கள் ஆன்மாவிடம் நிறைய பேசுங்கள்..
உங்களை வேறு தளத்திற்கு கொண்டு செல்லும்...

நன்றி...

No comments:

Post a Comment