Monday 6 November 2017

துன்பங்களுக்கான காரணம்

ஒரு நிமிடக் கதை !

!

“நினைத்துப் பார்த்தால் நெஞ்சு கொதிக்கிறது சாமீ. எத்தனை பேர் என்னை கேலி செய்து இருக்கிறார்கள்? எத்தனை பேர் வசை பாடி இருக்கிறார்கள்?

எத்தனை பேர் என் முதுகில் குத்தி இருக்கிறார்கள்? அவர்கள் ஒவ்வொருவரையும் பழி
வாங்காமல் ஓய மாட்டேன்” என்று
அந்த சாமியார் முன் வந்து பொருமினான் ஒரு சீடன்.

“ஏதாவது மந்திரம் கிந்திரம் இருந்தா சொல்லுங்க சாமி” என்றான்.

சாமி யோசித்தார்.

“சரி… ஒன்று செய்யலாம்” என்று கோணிப்பையை சீடன் கையில் கொடுத்தார் சாமி.

“நீ யாரையெல்லாம் பழி வாங்க வேண்டும் என நினைக்கிறாயோ, அவர்கள் பெயரை ஒரு உருளைக் கிழங்கில் செதுக்கி இந்த கோணிப் பையில் போட்டுக் கொண்டே வா” என்றார்.

“ஆனால் இரண்டு நிபந்தனைகள்” என்று தொடர்ந்தார்…. “ஒரு உருளைக்கிழங்கில் இரண்டு மூன்று பெயர்களை செதுக்கக் கூடாது. ஒவ்வொரு பெயரையும் தனித் தனியாய் செதுக்க வேண்டும்”.

“சரி… அப்புறம்?”

“நீ எங்கெல்லாம் போகிறாயோ அங்கெல்லாம் இந்த கோணியை தூக்கி கொண்டு போக வேண்டும்”..

“இவ்வளவு தானா? நான் என்னமோ பெரிசா ஏதோ சொல்லப் போறீங்கன்னு நினைச்சேன்” என்று சீடன் எழுந்து போனான்.

அன்றிலிருந்து யார் மீதெல்லாம் ஆத்திரமோ யார் யாரை பழிவாங்க வேண்டும் என்று நினைப்பு வருகிறதோ, அப்போதெல்லாம் ஒரு உருளைக்கிழங்கை எடுத்து பெயரை செதுக்கி கோணிப் பையில் போட்டுக் கொண்டே வந்தான்.
ஆரம்பத்தில் கோணியை தூக்கி கொண்டு திரிவது ஒன்றும் பெரிய சிரமமாய் தெரியவில்லை.
ஆனால் நாளாக .....நாளாக, அது சுமையாக தோன்றியது. இன்னும் கொஞ்சநாள் போனதும் தூக்குவதே சிரமமாகிவிட்டது.

இதனிடையே சில நாட்களுக்கு பின் அந்த உரித்த உருளைக் கிழங்குகளிலிருந்து வாசனை வர ஆரம்பித்தது. நாள் போக போக அது சகிக்க முடியாத அழுகிய நாற்றமாக வீச ஆரம்பித்தது.
அவன் மூட்டையை தூக்கி கொண்டு வந்தாலே, எல்லோரும் – நெருங்கிய நண்பர்கள், கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகள் என எல்லோரும் ஓட ஆரம்பித்தார்கள். அவனிடம் பேசவோ, அவன் சொல்வதை யாரும் காதுகொடுத்து கேட்கவோ கூட தயாராக இல்லை.

சீடன் மறுபடியும் சாமியிடம் வந்தான்.

“என்ன சாமி இப்படிப் பண்ணிட்டீங்களே..?” என்றான்.

“என்ன புரிந்தது?” என்றார் சாமி.

“பழி வாங்கும் குரோத உணர்வை சேகரித்துக் கொண்டே வந்தால் அது சுமையாகி விடும்.
துர் நாற்றம் வீசும். யாரும் பக்கத்தில் வர மாட்டார்கள். அதை எனக்கு விளக்கத் தானே இப்படி செய்தீர்கள்?” என்றான் சீடன்.

“ம்… சரி. ஆனால் நீ இன்னும் முழுக் கிணற்றை தாண்டவில்லை” என்றார் சாமி.

“புரியலையே…?”

“உன் பிரச்னை சுமை கூடி போச்சே என்பதும் நாற்றமடிக்கிறதே என்பதும் தான் என நீ நினைக்கிறாய், இல்லையா?”

“ஆமாம்”

“சரி… அந்த உருளைக் கிழங்குகளை அவ்வப்போது கொட்டி அந்த கோணியை காலி செய்து கொண்டே வந்தால் இந்த சுமைப் பிரச்னை, நாற்றப் பிரச்சனை தீர்ந்து விடும் என்று நினைக்கிறாய் இல்லையா?”

“ஆமாம்.”

“மகனே, பிரச்சனை உருளைக் கிழங்கில் இல்லை. கோணிப்பை. ?!

கோணி இருப்பதால் தானே அதில் உருளை கிழங்கை சேர்க்க ஆரம்பித்தாய்?
எனவே,

உனக்கு சுமை இல்லாமல் இருக்க வேண்டுமானால், அந்த சுமை நாற்றம் எடுக்காமல் இருக்க
வேண்டுமானால் கோணியை முதலில் தூக்கி எறி.
உனக்கு துன்பம் இழைத்தவர்கள் தண்டனை பெற்றே தீருவார்கள்.. நீ உன் வேலையில் கவனம் செலுத்தி உன் கடமையை சரியாக செய்து வா.”..என்றார்..

ஆம்,நண்பர்களே..

கைவிட வேண்டியது பழி வாங்கும் நினைப்பை மட்டுமல்ல, பழி வாங்கும் மனதையும் கூடத் தான்...

"மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும்........

மறக்க வேண்டாதவகளை மறந்து விடுவதும் தான் ".
இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு எல்லாம் காரணம்.

No comments:

Post a Comment