Friday 2 March 2018

அனுமன் vs ஆடிட்டர்

படித்ததில்  பிடித்தது....

               நான் நண்பரது வீட்டு விழாவிற்கு சென்றிருந்தபோது
ஒரு ஆடிட்டரும் வந்திருந்தார். அவரது வேடிக்கையான
பேச்சில் மயங்கி அவரைச் சுற்றி ஒரு கூட்டமே இருந்தது.
நானும் அருகில் சென்று கவனித்தேன். அவர் சொன்ன
செய்திகளையே இங்கு தருகிறேன்.

“…. எங்க புரஃபெஷன் ஒரு பவர்புல்லானது. எங்களால்
ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். வேடிக்கைக்காக
எங்கள் வட்டத்தில் உலவும் ஒரு கதையைச் சொல்கிறேன்
கேளுங்கள்.

ராமாயணத்தில் இந்திரஜித்தின் பாணத்தால் அடிபட்டுக்
கிடக்கும் லட்சுமணன். அவனைக் காப்பாற்ற சஞ்சீவி
மூலிகையைக் கொண்டுவரும்படிக்கு அனுமன் பணிக்கப்
படுகிறான். அனுமன் சஞ்சீவி மூலிகையைத் தேடித் தேடி
சலித்துப்போய் சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்துக்
கொண்டு வருகிறான். லட்சுமணன் பிழைத்துக் கொள்கிறான்.
யுத்தம் முடிகிறது. அனைவரும் அயோத்திக்கு
திரும்புகின்றனர்.

அயோத்தி திரும்பிய அனுமன் சஞ்சீவி மூலிகையை
கொண்டுவந்ததற்கான பயணப் படிக்கு விண்ணப்பிக்கிறார்.
ஆனால் அவரது பயணப்படி மறுக்கப்படுகிறது.
காரணமாக ஆடிட்டர்/அக்கவுண்டண்ட் சுட்டிக் காட்டிய விபரம்:

1. அனுமன் சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவரும் பயணத்திற்கு
முறைப்படி அயோத்தி அரசரது அனுமதியைப் பெறவில்லை.

2. அனுமன் ஒரு 4th Grade Officer. எனவே அவருக்கு
வான் வழிப்பயணம் அனுமதி இல்லை.

3. அனுமன் சஞ்சீவ பர்வதத்துடன் அனுமன் வந்தது excess luggage.
Excess luggage is not allowed.

மேற்கண்ட காரணங்களுக்காக அனுமனின் பயணப்படி மறுக்கப்
படுகிறது என்று எழுதிய ஆடிட்டர்/அக்கவுண்டண்டின் குறிப்பைப்
படித்த அயோத்தி மன்னன் உடனே அனுமனை வரச்சொல்கிறார்.

அனுமனிடன் இது குறித்துச் சொல்ல அனுமனும் கவலை கொள்கிறார்.
“எஜமானே, நீங்கள் இட்ட பணியை செய்யத்தானே பயணித்தேன்.
அதற்குக்கூட பயணப்படி கிடையாதா,’ எனப் புலம்பிய அனுமனை
தேற்றிய ராமன், கோப்பில் ‘please re examine ‘ என எழுதி
அரண்மனை ஆடிட்டர்/அக்கவுண்டண்டுக்கு திருப்பி அனுப்புகிறார்.

கூடவே அனுமனுக்கு ஆடிட்டர்/அக்கவுண்டண்டை நேரில் ஒருமுறை
சந்திக்கும்படியும் அறிவுறுத்துகிறார்.

கவலையுடன் சென்ற அனுமன் ஆடிட்டர்/அக்கவுண்டண்ட்டிடம் சென்று
பேசிப்பார்க்கிறார். ஆனால் பயணப்படி கிட்டுவதாக இல்லை. இறுதியில்
அனுமன்,” இதோ பார் இந்த பயணப்படியை நீ எனக்கு கிடைக்கும்படி
செய்தாயானால் உனக்கு நான் அதில் 20 சதவீதம் பங்களிக்கிறேன்”
எனச் சொன்னவுடன் சற்று யோசித்தபிறகு, “சரி நீ போ..உனது பயணப்படி
உனக்கு கிடைக்கும்..” என்று பதில் வந்தது.

அதன் பிறகு இரண்டே நாளில் அனுமனின் பயணப்படி sanction
ஆகி அவருக்கு கிடைத்தது. ஆச்சரியத்துடன் அனுமன் அந்தக் கோப்பை
பார்த்தபோது அதே ஆடிட்டர் அவர் எழுப்பிய query களுக்கு அவரே
clarification எழுதி பயணப்படியை sanction செய்திருந்தார்.

அந்த clarifications :

1. அனுமன் அயோத்தி மன்னனாகிய பரதனின் அனுமதியைப்
பெறாவிட்டாலும் தற்போதைய மன்னனாகிய ராமனின் அனுமதியைப்
பெற்றே பயணித்ததால் அவரது பயணம் அனுமதிக்கப்பட்ட பயணமாகிறது.

2. அனுமன் 4TH GRADE OFFICER என்றாலும் அவசர நிமித்தம்
காரணமாக பயணித்ததால் அவருக்கு வான்வழிப் பயணத்திற்கான
அனுமதி அளிக்கப் படுகிறது.

3. அனுமன் சஞ்சீவி வேரைக் கொண்டுவரப் பயணித்தாலும் தவறான
வேரைக் கொண்டு வந்திருந்தால் மீண்டும் பயணிக்க வேண்டியிருக்கும்
எனவே சஞ்சீவ மலையைக் கொண்டுவந்ததினால் இந்த அதிகப்படியான
பயணமும் செலவும் மிச்சமாவதால் இந்த EXCESS LUGGAGE அனுமதிக்கப்
படுகிறது…”

என்று கதையை நண்பர் சொல்லிக் கொண்டு செல்ல
கூடியிருந்தோரெல்லாம் சிரித்து மாய்ந்தனர்.

நாராயணா! இந்த ஆடிட்டர்/அக்கவுன்டன்ட் இம்ச தாங்க முடியலப்பா!

No comments:

Post a Comment